உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் மாணவனை சுற்றி வளைத்து தாக்கிய பள்ளி மாணவிகள்

Published On 2023-09-15 09:43 GMT   |   Update On 2023-09-15 09:43 GMT
  • மாணவன் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

திருவள்ளூர்:

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவிக்கு திருவள்ளூர் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்து தினமும் பின்தொடர்ந்ததாக தெரிகிறது. இதனை மாணவி கண்டித்தும் கேட்கவில்லை.

இதுபற்றி அந்த மாணவி உடன்படிக்கும் மற்ற தோழிகளிடம் கூறினார். அவர்களும் அந்த மாணவனை எச்சரித்தனர். ஆனாலும் மாணவன் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் பஸ்நிலையத்தில் நின்ற அந்த மாணவனிடம் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தோழிகள் சேர்ந்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து திருவள்ளூர், காமராஜர் சிலை அருகே வந்து பதுங்கி நின்றார்.

ஆனாலும் அவரை மாணவிகள் விரட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் எங்கும் தப்பி ஓட முடியாமல் மாட்டிக்கொண்ட மாணவனை, அனைத்து மாணவிகளும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மாணவிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து போகச்செய்தனர்.

மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொல்லை கொடுத்த மாணவரை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags:    

Similar News