கோவையில் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு - செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம்
- போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை:
தொழில் நகரான கோவையில் இருந்து ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வளைகுடா நாடுகளான குவைத், ஷார்ஜா, சவுதி அரேபியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் கோவையில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, வெட்கிரைண்டர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இந்த வழித்தடமானது எண்ணெய் போக்குவரத்து மட்டுமின்றி, வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை எடுத்தும் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இருந்து வந்தது.
தற்போது இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதாலும், இந்த வழியாக சரக்கு போக்குவரத்து நடத்தப்படாது என முக்கிய சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளதாலும், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சரக்கு போக்குவரத்து 20 முதல் 25 நாட்கள் வரை தாமதமாகிறது என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும்போது தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதத்தால் குறித்த நேரத்தில் வர்த்தகம் நடைபெறுவது தடைபடுகிறது. அத்துடன் போக்குவரத்து செலவு, ஆர்டர்கள் ரத்து, கட்டாயத் தள்ளுபடி விலைக்கு விற்க வேண்டிய நிலை போன்ற அபாயங்களும் ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டு 2 பில்லியன் டாலர், வளைகுடா நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்த போர் பதற்றத்தால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று வெட்கிரண்டர் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அமெரிக்க போர் பதற்றத்தால் வெட்கிரைண்டர்கள் கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர்.
இதுதொடர்பாக வெட்கிரைண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
கோவையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் கிரைண்டர்கள் ஏற்றுமதியாகின்றன.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றத்தால் கடந்த சில நாட்களில் வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்களின் ஆர்டர்களை ரத்து செய்து விட்டனர். இதனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனுப்பப்படாமல் தேங்கியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான 450 வெட் கிரைண்டர்கள், ஐக்கிய அரசு அமீரகத்தின் ஜபல் அலி துறைமுகத்தில் முடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து பொருளுக்கான பணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வால் வெட்கிரைண்டர் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் பதற்றத்தால் உயர்ந்துள்ள செலவினங்களை ஈடுகட்டும் வகையில் ஏற்றுமதிக்கான சலுகைகளை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.