உள்ளூர் செய்திகள்

பழனியில் அரிவாளை வைத்து பொதுமக்களை மிரட்டும் வாலிபரால் பரபரப்பு

Published On 2023-07-05 10:03 GMT   |   Update On 2023-07-05 10:03 GMT
  • பழனி புறநகர் பகுதிகளிலும் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அடிக்கடி மர்ம நபர்கள் சுற்றி பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.
  • பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்களை போலீசார் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி:

பழனி 11வது வார்டு பெரியகடை வீதி குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவர் தொடர்ந்து அப்பகுதியில் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு குடிபோதையில் யாரா இருந்தாலும் வெட்டுவேன் என மிரட்டி பேசி வந்துள்ளார்.

மேலும் தனது வீட்டில் முன்பு அரிவாளை வைத்துக் கொண்டு சினிமாவில் கிளைமாக்ஸ் காட்சிகளில் வருவது போல அமர்ந்து கொண்டு யாரும் இந்த தெருவை கடந்து செல்லக்கூடாது. மீறினால் வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். இவரது மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல பழனி புறநகர் பகுதிகளிலும் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அடிக்கடி மர்ம நபர்கள் சுற்றி பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். கோவில் நகரான பழனியில் இது போன்ற நபர்களால் சமூக விரோத செயல்கள் அதிகரித்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

எனவே இவரைப் போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்களை போலீசார் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் விசாரணைக்கு சென்ற போலீசாரை வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News