சொத்து தகராறில் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்- 3 பேர் கைது
- அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
- அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மீனாட்சிபுரம் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 59), விவசாயி. இவரது அண்ணன் சமுத்திரம் (60). இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சமுத்திரம் தனது தம்பிக்கு சொந்தமான இடத்தில் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிமுத்து தனது நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டு இருந்தார். அதில் நாற்றுகள் அழுகி விட்டதால் நேற்று மாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் எலுமிச்சை நாற்றுகளை அகற்றி விட்டு நிலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் அண்ணன் ஆக்கிரமித்து இருந்த இடத்தையும் சீர் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அவரது அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாள் தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சமுத்திரம், மணிகண்டன், தலைமுத்து ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறில் அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.