உள்ளூர் செய்திகள்

வில்லுக்குறி அருகே விபத்து- அரசு பஸ் மோதி தனியார் பள்ளி வாகன டிரைவர் பலி

Published On 2022-07-07 05:42 GMT   |   Update On 2022-07-07 05:42 GMT
  • அரசு பஸ் ஒன்று அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது.
  • இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இரணியல்:

திருவட்டார் அருகே வியன்னூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஸின் (வயது 28).

இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் காலை, மாலை நேரங்களில் பள்ளியிலிருந்து மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதுடன் மாலையில் வீட்டிற்கு அழைத்து சென்று வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் மாணவிகளை வீட்டில் இறக்கி விட்டு பஸ்சை வில்லுக்குறி பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலையில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்காக வில்லுக்குறியில் நிறுத்தி இருந்த பஸ்சை எடுப்பதற்காக வீட்டிலிருந்து வில்லுக்குறிக்கு வந்தார்.

பஸ்சை விட்டு இறங்கி வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஸின் பலியானது குறித்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

விபத்து குறித்து இரணியல் போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News