உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்த சுபாஷ்கிருஷ்ணன்

மதுரையில் ரெயில் முன்பாய்ந்து தனியார் கல்லூரி தாளாளர் தற்கொலை

Published On 2023-05-30 09:25 IST   |   Update On 2023-05-30 09:25:00 IST
  • தற்கொலை செய்து கொண்ட நபரின் சட்டை பையில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  • சுபாஷ்கிருஷ்ணனுக்கு திருமணமாகி சண்முக பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மதுரை:

மதுரை விளாங்குடி அருகே உள்ள கோவில் பாப்பாக்குடி ரெயில்வே தண்டவாள பகுதியில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த அந்த வாலிபர், ரெயில் நெருங்கி வந்ததும் திடீரென பாய்ந்தார். இதில் ரெயில் மோதி அவர் உடல் 2 துண்டுகளாக சிதறி பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட நபரின் சட்டை பையில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தவர் கோவை மாவட்டம் கூடம்பாளையம் வடமதுரை நால்வர் நகரை சேர்ந்த பாலன் மகன் சுபாஷ்கிருஷ்ணன் (வயது 35) என தெரியவந்தது.

இவர் கோவையில் உள்ள பி.எட். கல்லூரியில் தாளாளராக இருந்தார். சுபாஷ்கிருஷ்ணனுக்கு திருமணமாகி சண்முக பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த ஆண்டு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சண்முகபிரியா மதுரை அண்ணாநகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார். மேலும் அவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கும் மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்று விட்டதால் விரக்தியில் இருந்த சுபாஷ்கிருஷ்ணன் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக மதுரைக்கு வந்து சென்றார். அதன்படி நேற்றும் விவாகரத்து வழக்கு மதுரை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் சுபாஷ்கிருஷ்ணன் ஆஜரானார். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

எனவே அவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News