உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் அருகே அம்மன் கோவிலுக்குள் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-03-22 06:33 GMT   |   Update On 2023-03-22 06:33 GMT
  • பூசாரி நுரையீரல், கிட்னி பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
  • கோவிலுக்குள்ளேயே பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 28 வருடங்களாக அத்தியப்பகவுண்டர் (வயது 90) என்பவர் பூசாரியாக இருந்து பூஜைகள் செய்து வந்தார். இதற்காக கோவிலின் அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

பூசாரி அத்தியப்பன் நுரையீரல், கிட்னி பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கருவறை பின்புறம் உள்ள வேப்பமரத்தில் பூசாரி தூக்கு போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தந்தனர். அதன்பேரில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுண்டீஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூசாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் பூசாரி அத்தியப்பகவுண்டர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் பூசாரி அத்தியப்பனின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் அரம்பாலூர் அருகே உள்ள பூலாம்பாடி ஆகும். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இவர்களுக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

கோவிலுக்குள்ளேயே பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News