சமூக வலைதளம் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த 5 பேரை காவலில் விசாரிக்க அனுமதி
- வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
- வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
பூந்தமல்லி:
பயங்கரவாத அமைப்புகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆட்கள் சேர்த்ததாகவும், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை, கோவை, மயிலாடுதுறையை சேர்ந்த ராமா சாதிக், முகமது ஆசிக், முகமது இர்பான், ஜெகபர்அலி, ரகமத் ஆகிய 5 பேரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின்போது, கைதான 5 பேரையும் 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், கைதான 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் வருகிற 23-ந் தேதி காலை 10 மணி வரை விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து திருச்சி, புழல் சிறையில் வைக்கப்பட்டு இருந்த 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.