திருப்பூரில் வாலிபரை கொன்று நொய்யல் ஆற்றில் வீசிச்சென்ற கும்பல்
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் கிடந்த பிணத்தை மீட்டனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பிச்சம்பாளையம் நொய்யல் ஆற்றுப்பாலம் அடியில் 35வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் கிடந்த பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இறந்து கிடந்தவர் ஆடையின்றி கிடந்ததால் மர்மநபர்கள் கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.