கொரட்டூர் பள்ளியில் மாணவியை பிரம்பால் தாக்கிய ஆசிரியை மீது போலீசில் புகார்
- மாணவி கீர்த்தனா மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம் வகுப்பு ஆசிரியை தன்னை அடித்ததாக தெரிவித்து உள்ளார்.
- அதிர்ச்சி அடைந்த தந்தை சத்யா இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியை மீது கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அம்பத்தூர்:
கொரட்டூர் ரெயில் நிலையம் அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அதில் கொரட்டூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் சத்யா என்பவரது மகள் கீர்த்தனா (11) 4-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று காலை வீட்டு பாடத்தை சோதனை செய்த போது மாணவி கீர்த்தனா தமிழ் பாடத்தில் வீட்டு பாடம் எழுதவில்லை. இதனால் வகுப்பறையில் வைத்திருந்த பிரம்பால் மாணவியின் வலது கால் மற்றும் இடது கையில் ஆசிரியை தாறுமாறாக அடித்துள்ளார். இதனால் குழந்தைக்கு கை காலில் பலத்த வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கட்டியது.
மாணவி கீர்த்தனா மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம் வகுப்பு ஆசிரியை தன்னை அடித்ததாக தெரிவித்து உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தந்தை சத்யா இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியை மீது கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் குழந்தையை தாக்கிய ஆசிரியை குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.