உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசியதில் பா.ஜ.க. பிரமுகர் காரின் பின்பக்க டயர் எரிந்துள்ள காட்சி.


சிதம்பரம் அருகே பா.ஜனதா தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Published On 2022-09-12 03:38 GMT   |   Update On 2022-09-12 03:38 GMT
  • சிதம்பரம் அருகே பரங்கிபேட்டையில் பாரதிய ஜனதா தலைவரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
  • கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை சலங்கைகாரன் தெருவை சேர்ந்தவர் தாமரை முருகன். இவர் பரங்கிபேட்டை வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். நேற்று இரவு இவர் கட்சி பொதுகூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தனது காரை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். நள்ளிரவு நேரம் பயங்கர வெடிசத்தம் கேட்டது. அந்த பகுதியில் இருந்து நெருப்பு பற்றி எரிந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

வீட்டில் தூங்கிய தாமரை முருகன் அதிர்ச்சியடைந்து வெளியே வந்தார். அப்போது கார் பற்றி எரிவதை கண்டு பதறிபோனார். உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதில் காரின் பின்பக்க டயர் எரிந்து நாசமானது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.

தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜா, பரங்கிபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருப்பது தெரியவந்தது. அதற்கான தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News