உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே இருவேறு விபத்து- கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி

Published On 2023-02-14 11:04 GMT   |   Update On 2023-02-14 11:04 GMT
  • கட்டிட தொழிலாளியான ஜெயராம் மோட்டார் சைக்கிளில் மதிப்பனூர்-மேட்டுப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
  • ரோட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

திருமங்கலம்:

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் ஜெயசூர்யா(வயது19). இவர் பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று மாலை ஜெயசூர்யா திருமங்கலத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். கப்பலூர் மேம்பாலத்தில் இருந்து வலதுபக்கம் திரும்பியபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசூர்யா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாணவனின் தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர் அருகே உள்ள சின்னாரெட்டிபட்டியை சேர்ந்தவர் ஜெயராம்(29). கட்டிட தொழிலாளியான இவர், மோட்டார் சைக்கிளில் மதிப்பனூர்-மேட்டுப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

படுகாயமடைந்த குருசாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News