உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளுடன் தாய் ஜமுனா.

ஆம்பூர் அருகே 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி

Published On 2023-04-04 05:23 GMT   |   Update On 2023-04-04 05:23 GMT
  • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • ஜமுனா கணவனை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக பெரியாங்குப்பத்தில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

ஆம்பூர்:

ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 40). போர்வெல் தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா (33). இவர்களுக்கு யாகிதா (4), யாஷிகா (18 மாதம்) என 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

மகேஷ்குமார் தொழில் சம்பந்தமாக பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருவது வழக்கம். கஸ்பாவில் உள்ள மகேஷ் குமார் வீடு சேதம் அடைந்துள்ளதால் அந்த வீட்டில் தங்க ஜமுனா மறுத்து வந்தார்.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஜமுனா கணவனை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக பெரியாங்குப்பத்தில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார். அங்கு வேலைக்கு எங்கும் செல்லாமல் ஜமுனா வீட்டிலேயே இருந்துள்ளார். இதற்கிடையே இவர் குழந்தைகளுடன் தாய் வீட்டில் தங்கியிருப்பது பற்றி குடும்பத்தாரிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் ஜமுனாவின் அறை நீண்ட நேரமாக மூடி இருந்ததால் அவரின் தம்பி வர்மா அறை கதவை தட்டி பார்த்தார். கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வர்மா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு ஜமுனாவும் அவரது 2 குழந்தைகளும் தரையில் மயங்கி கிடந்தனர். அருகில் குளிர்பானமும், விஷ பாட்டிலும் கிடந்தன. இதை கண்ட வர்மா அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தாரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே குழந்தைகள் 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஜமுனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News