உள்ளூர் செய்திகள்

டி.வி. ஷோரூம் உள்பட 2 கடைகளில் ஷட்டரை உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-11-10 09:09 GMT   |   Update On 2022-11-10 09:09 GMT
  • கடையின் அருகில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையிலும் ஷட்டரை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை.
  • 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி:

தருமபுரி நகர் பாரதிபுரம் நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் எதிரே பிரபல டி.வி. ஷோரூம் உள்ளது. கடந்த மாதம் தான் புதிதாக திறக்கப்பட்டது. இங்கு சுமார் 35 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு ஷோரூமை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை 9.45 மணியளவில் கடையை கணக்காளர் திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ஷட்டரை கடப்பாறை மூலம் நெம்பி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.63 ஆயிரத்து 700 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இந்த கடையின் அருகில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையிலும் ஷட்டரை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை.

2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டனர். கடையில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள் 2 இடங்களிலும் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் உபகரணங்களை திருடிச்சென்று விட்டனர். எனவே அதில் பதிவான காட்சிகளை காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நகரின் முக்கியமான இடத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News