உள்ளூர் செய்திகள்

காட்டாங்கொளத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

Published On 2022-09-06 11:14 GMT   |   Update On 2022-09-06 11:14 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி 27,010 ஏக்கரில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • விச்சந்தாங்கல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி 27,010 ஏக்கரில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

விரைவில் அறுவடை பணிகள் நடைபெற உள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டியும், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டியும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார நெல் விலையுடன் சன்ன ரகத்திற்கு கூடுதலாக ரூ. 100 குவின்டால் ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ.2,160 எனவும் மற்ற ரகத்திற்கு ரூ. 75 குவின்டால் ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ. 2,115 எனவும் நெல் கொள்முதல் விலை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள விச்சந்தாங்கல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

மேலும் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்தின்கீழ் 5 விவசாயிகளுக்கு மரச்செக்கு அமைப்பதற்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க் கொடிகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியவதி தேவி, உதவி மேலாளர் அரிகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Similar News