உள்ளூர் செய்திகள்

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மாணவர் உள்பட 2 பேர் பலி

Published On 2024-03-30 06:54 GMT   |   Update On 2024-03-30 06:54 GMT
  • காயமடைந்த காளிதாசை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கவின் (வயது 17). இவர் கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவிலில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவ மீனவர்கள் ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24).

இந்த நிலையில் கவின், ஜஸ்வந்த், காளிதாஸ் ஆகிய 3 பேரும் நேற்று இரவு சின்னங்குடியில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்றனர். பின்னர் இரவில் அங்கேயே தங்கினர்.

இன்று காலை 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமுல்லைவாசல் நோக்கி புறப்பட்டனர். அப்போது ராதாநல்லூர் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் மின்கம்பம் உடைந்த நிலையில் மாணவர் கவின், ஜஸ்வந்த் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காளிதாஸ் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கவின், ஜஸ்வந்த் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த காளிதாசை சிகிச்சைக்காகவும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News