மதுரையில் மாநகராட்சி நீச்சல்குளத்தில் இரு தரப்பினர் மோதல்- 16 பேர் கைது
- குடிபோதையில் 13 பேர் கும்பல் மோட்டார் சைக்கிள்களில் நீச்சல் குளத்துக்கு வந்தனர்.
- இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
மதுரை:
மதுரை மேலபனங்காடி, சக்கரத்தாழ்வார் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 35). இவர் தல்லாகுளம் தங்கராஜ் சாலையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில், மேற்பார்வையாளராக உள்ளார்.
சம்பவத்தன்று மாலை இவர் பணியில் இருந்தபோது குடிபோதையில் 13 பேர் கும்பல் மோட்டார் சைக்கிள்களில் நீச்சல் குளத்துக்கு வந்தனர். அப்போது அவர்களது வாகனம் நீச்சல்குளத்தின் நுழைவு வாயிலில் மோதியது. இதில் கதவு சேதமடைந்தது. இதை பிரேம்குமார் தட்டி கேட்டார். அவருக்கு ஆதரவாக சிலர் அங்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
அதன்படி வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர்.
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மனோஜ், கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்த விஸ்வா (23), காமாட்சிராஜன், விஷ்ணு வர்தன், சரவணகுமார், சிவ குமார், முகமதுஅப்துல்லா, பிரேம்குமார், அருண்பாண்டி, சுந்தரபாண்டி, ரமேஷ், நமச்சிவாயம், தினேஷ் ஆகிய 13 பேரை கைது செய்தனர்.
இதே வழக்கில் விஸ்வா கொடுத்த புகாரின்பேரில் நீச்சல்குளத்தின் மேற்பார்வையாளர் பிரேம்குமார் உள்பட 3 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.