உள்ளூர் செய்திகள்

கண்டெய்னர் லாரி மோதி வங்கி பெண் அதிகாரி பலி- திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம்

Published On 2023-03-08 15:25 IST   |   Update On 2023-03-08 15:25:00 IST
  • பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிலுவை மேரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

திருவொற்றியூர்:

எண்ணூர், திலகர் நகர், 2-வது தெருவில் வசித்து வருபவர் சதீஷ். துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிலுவை மேரி (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த மாதம் 6-ந்தேதி திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சிலுவை மேரியை வழக்கமாக அவரது அண்ணன் அழைத்து செல்வதும், பணிமுடிந்ததும் மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக சிலுவை மேரி தனியாக மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை பணி முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் மணலி விரைவு சாலையில் பக்கிங்காம் கால்வாய் அருகே வந்து கொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிலுவை மேரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காசிமேடு, தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி வைஜெயந்தி (31). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். வைஜெயந்திக்கும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த வைஜெயந்தி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.

Tags:    

Similar News