உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டி படுகொலை

Published On 2022-11-30 05:35 GMT   |   Update On 2022-11-30 05:35 GMT
  • தந்தையின் நிலத்தை பிரித்து கொள்வது தொடர்பாக ஜெயராமனுக்கும், பழனிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
  • நிலத்தகராறில் விவசாயியை உறவினரை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டேக்குப்பம் அருகேயுள்ள கீழாண்டி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பூவன். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கோவிந்தம்மாளுக்கு ஜெயராமன் என்ற மகனும், இரண்டாவது மனைவி பச்சையம்மாளுக்கு பழனி என்ற மகனும் உள்ளனர்.

தந்தையின் நிலத்தை பிரித்து கொள்வது தொடர்பாக ஜெயராமனுக்கும், பழனிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இது தொடர்பாக காவேரிபட்டணம் போலீசில் பழனி புகார் கொடுத்து அந்த விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை பழனி கொல்லாகுடி அம்மன் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெயராமனும், அவரது மகன்கள் 2 பேரும் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து பழனியை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பழனி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் பழனி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு டேம் மற்றும் காவேரிபட்டணம் போலீசார் விரைந்து வந்து பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பழனியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்நிலையில் குருபரபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மகாராஜாக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் நேரில் வந்து இந்த படுகொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடிய ஜெயராமன் மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலத்தகராறில் விவசாயியை உறவினரை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News