உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து தம்பதியை கட்டிப்போட்டு அரிவாள் முனையில் நகை கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

Published On 2023-09-10 09:29 GMT   |   Update On 2023-09-10 09:29 GMT
  • சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று மர்மநபர்கள் அரிவாள் முனையில் மிரட்டினர்.
  • கொள்ளை குறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37 ) விவசாயி. இவரது மனைவி சிவசங்கரி (32). சம்பவத்தன்று இரவில் கணவன்-மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை தட்டினர். எழுந்து சென்று ஜெயராஜ் கதவைத் திறந்தார். சட்டென்று வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளை காட்டி ஜெயராஜை மிரட்டினர்.

சத்தம் கேட்டு எழுந்த சிவசங்கரியையும் மிரட்டினர். பின்னர் தம்பதியை கயிறால் கட்டி போட்டனர். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று அரிவாள் முனையில் மிரட்டினர்.

இதையடுத்து சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 4 முக்கால் பவுன் தங்க தாலி செயின், 30 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் வீட்டில் இருந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனைத் தொடர்ந்து கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்த ஜெயராஜ் அந்த மர்மநபர்களை துரத்தி சென்றார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News