உள்ளூர் செய்திகள்

அர்ஜூன் சம்பத்தை விடுதலை செய்யக்கோரி போலீஸ் நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா

Published On 2022-09-07 10:00 GMT   |   Update On 2022-09-07 10:00 GMT
  • திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர்.
  • இந்துமக்கள் கட்சியினர் ஆவேசமடைந்து அர்ஜூன் சம்பத்தை விடுதலைசெய்யுமாறு தெரிவித்தனர்.

திண்டுக்கல்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று முதல் 150 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராகுல்காந்திக்கு எதிராக 'கோபேக்'இயக்கம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் அறிவித்திருந்தார்.

இதற்காக நேற்றிரவு கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அர்ஜூன்சம்பத்தை கைது செய்தனர்.

இதனால் இந்துமக்கள் கட்சியினர் ஆவேசமடைந்து அவரை விடுதலைசெய்யுமாறு தெரிவித்தனர். ஆனால் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்டம் முழுவதிலும் இருந்து இந்து மக்கள் கட்சியினர் அங்கு விரைந்து வந்தனர்.

இன்று காலை வரை அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ்நிலைய வாசலில் அமர்ந்து அர்ஜூன் சம்பத்தை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டபடி இருந்தனர். அப்போது ஒருவர் போலீஸ் நிலையம் முன்பிருந்த மரத்தின்மீது ஏறி அவரை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.

இதனையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கீழே இறக்கினர். மேலும் சிலர் ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதனால் போலீஸ்நிலையம் முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News