அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்ட காட்சி.
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு அடி-உதை: பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்
- மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவி- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பரணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும் செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்துள்ளார்.
இந்த குழுவில் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் உள்ளனர்.
இந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள மாணவிகள் சில பேருக்கு ஆசிரியர் பரணி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி அச்சுறுத்தியுள்ளார்.
மாணவிகளிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் அவரது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இன்று காலை சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்தனர். பள்ளி வகுப்பறையில் இருந்த ஆசிரியர் பரணியை அவர்கள் திடீரென தாக்கினர். அங்கிருந்தவர்கள் ஆசிரியரை மீட்டனர்.
மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் ஆசிரியர் பரணியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.