17 வயது சிறுமியை கடத்தி சென்று 10 நாட்களாக பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவர் கைது
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
- மாணவியை கடத்தி சென்று 10 நாட்களாக பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்தவர் 22 வயது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு கோவை காளப்பட்டியை சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். இது குறித்து மாணவி தனது காதலனிடம் கூறினார். எனவே மாணவர் தனது காதலியை தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்வது என முடிவு சென்றார்.
அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவரை மாணவர் திருத்துறைபூண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
தங்களது மகளை மாணவர் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் பெற்றோர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் திருத்துறைபூண்டியில் உறவினர் வீட்டில் காதலனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
பின்னர் போலீசார் 2 பேரையும் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்து அழைத்து வந்தனர். விசாரணை நடத்திய போலீசார் மாணவிக்கு 17 வயது என்பதால் அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவியை கடத்தி சென்று 10 நாட்களாக பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.