அமைச்சர் பொன்முடி வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை
- அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு இன்று அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது. இதனிடையே நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் நிறைவு பெற்றது. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அவரது வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெறும் முக்கிய ஆலோசனையில் மூத்த அமைச்சர்களான துரை முருகன், ஐ. பெரியசாமி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.