உள்ளூர் செய்திகள்

திருவாரூர், நாகை மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

Published On 2023-08-22 12:27 IST   |   Update On 2023-08-22 12:27:00 IST
  • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு இரு நாட்களுக்கு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தடை விதித்துள்ளார்.
  • முதலமைச்சரின் வருகையால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

திருச்சி:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.

முதல் நாள் நிகழ்வாக வருகிற 25-ந்தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறைவாரியாக ஆய்வு செய்கிறார்.

2-வது நாள் 26-ந்தேதி( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந்தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக வேளாங்கண்ணி புறப்பட்டுச் சென்று அங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார். பின்னர் 25-ந்தேதி சுற்றுப்பயணத்தை திருவாரூர் மாவட்டத்தில் தொடங்குகிறார்.

பின்னர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 27-ந்தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாளை மறுநாள் மற்றும் வருகிற 27-ந்தேதி ஆகிய இரு தினங்களிலும் திருச்சியில் ட்ரோன்கள் பறக்க திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தடை விதித்துள்ளார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டு வருகிறது. கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News