மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்: கலெக்டர் தகவல்
- அனைத்து மருந்து கடைகளிலும் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
- உத்தரவினை பின்பற்றாத காரணத்தினால் மருந்து கடைகளின் உரிமையாளரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் 29-9-2023 அன்று இணைய வழியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945-ல் அட்டவணைகள் எச், எச் ஒன், எக்ஸில் (H, H1, X) குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
மேலும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், இந்த உத்தரவினை பின்பற்றாத காரணத்தினால் மருந்து கடைகளின் உரிமையாளரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.