உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியலில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்- பக்தர்கள் அதிர்ச்சி

Published On 2024-02-11 04:07 GMT   |   Update On 2024-02-11 04:07 GMT
  • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
  • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News