தொட்டிலில் தூங்கிய 3 மாத பெண் குழந்தை திடீர் மரணம்- போலீசார், மருத்துவதுறையினர் விசாரணை
- முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் தூங்க வைத்தார்.
- பின்னர் மீண்டும் மாலை 3 மணியளவில் பார்த்த போது குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தது.
கோபி:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளரவெள்ளி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். டிராக்டர் டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (30). இவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கோகுலஸ்ரீ என்று பெயர் வைத்தனர்.
இந்த நிலையில் குழந்தை பிறந்ததும் முத்துலட்சுமி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகொரவன் பாளையம் என்ற பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் தூங்க வைத்தார். பின்னர் மீண்டும் மாலை 3 மணியளவில் பார்த்த போது குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தது.
இதையடுத்து அவர்கள் குழந்தையை கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிறந்த 3 மாதத்தில் பெண் குழந்தை இறந்து விட்டதால் இதுகுறித்து சிறுவலுர் போலீசாரும், மருத்துவ துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.