உள்ளூர் செய்திகள்

படிக்கட்டில் அமர்ந்து செல்வதில் மோதல்- எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

Published On 2023-07-16 13:01 IST   |   Update On 2023-07-16 13:01:00 IST
  • படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்:

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறும் பயணிகள் இருக்கைகளுக்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், மோதலில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

அதிலும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் மதுரையை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு அல்லாத இரண்டு பெட்டிகளிலும் குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் நின்றவாறும் பயணம் செய்தனர். இதற்கிடையே படிக்கட்டுகளிலும் இளைஞர்கள் சிலர் தொங்கியவாறும் சென்றனர்.

அப்போது படியில் அமர்வதில் பயணம் செய்வதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (36) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அவர்களை கண்டித்ததோடு, உள்ளே வருமாறும் அறிவுரை கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவாறு வந்தனர்.

ஒருகட்டத்தில் மோதல் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விருதுநகரை தாண்டி ஆர்.ஆர். நகர் பகுதியில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

பலியான இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓடும் ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News