விளாத்திகுளத்தில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனு
- பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை
- கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் கடந்த சில நாட்களாக பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் விளாத்திகுளத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் யூசுப் தலைமையில் பொதுமக்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அண்மையில் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் முறையற்ற முறையில் கட்டப்பட்டதாகவும் அதிகாரியிடம் முறையிட்டு அதனை சரி செய்ய கேட்டுக் கொண்டனர். இதேபோல் விளாத்திகுளம் வைப்பாறு மற்றும் பொதுப்பணித்துறை கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், உடனடியாக அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.