பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. பரமத்திவேலூரில் திருவிளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் பெருமானுக்கு சிறப்பு ஆராதனை
- பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது.
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது.
கைலாய வாத்தியம் முழக்கத்துடன் தேவாரம், திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை உடன் அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடை பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் பரமத்திவேலூர் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் மாணிக்கவாசகர் அர்ப்பணி மன்றம் 10-ம் ஆண்டு நிகழ்வாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் விளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.