உள்ளூர் செய்திகள்

ஆ.ராசா படத்திற்கு செருப்பு மாலை: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு

Published On 2022-09-15 13:13 GMT   |   Update On 2022-09-15 13:13 GMT
  • இந்து மதத்தினரைப்பற்றி ஆ.ராசா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • ஆ.ராசா படத்திற்கு அவமதிப்பு செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொடைக்கானல்:

தி.மு.க கொள்கை பரப்பு செயலாளாராக இருப்பவர் ஆ.ராசா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மதத்தினரைப்பற்றி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினர் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் நிலையங்களில புகார் அளித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானல் எம்.எம்.தெரு பகுதியில் ஆ.ராசா உருவபடத்தை வைத்து அதற்கு செருப்பு மாலை அணிவித்து அதனை வீடியோவாக எடுத்தனர். மேலும் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் சிலர் எழுப்பி அதனை சமூகஊடகங்களில் வெளியிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அவர்கள் அந்த படத்தை அங்கிருந்து அகற்றிவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் மூலம் ஆ.ராசா படத்திற்கு அவமதிப்பு செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News