உள்ளூர் செய்திகள்

34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-04-04 13:54 IST   |   Update On 2023-04-04 13:54:00 IST
  • மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிககளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
  • பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

இதில் இலவச வீட்டு மனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.6ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டிலான தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.

2021-22-ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மணிமேலை விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 சமுதாய அமைப்பி னர்களுக்கு மொத்தம் ரூ.4லட்சத்திற்கான ரொக்கத்தொகை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News