பணி பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- பணி பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கிராம நிர்வாக அலுவலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தன்னுடைய அலுவலக அறையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையில் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டிச்செல்வம் முன்னிலை வகித்தார். இதில்15-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
முதுகுளத்தூர்
இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொரு ளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாலுகா தலைவர் சுரேஷ், செயலாளர் பூமுருகன், பொருளாளர் அய்யப்பன், முதுகுளத்தூர் வி.ஏ.ஓ. முருகன், ராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.