ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
- ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- ரெயில்களில் கூட்டநெரிசலுடன் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 சந்திப்பு ரெயில் நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்ல நேரடி ரெயில் வசதி இல்லை. புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல 2 ரெயில்கள் மட்டுமே தினசரி சேவையாக உள்ளது.
இந்த 2 ரெயில்களை நம்பி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்ட பயணிகள் உள்ளனர். இதன் காரணமாக இந்த ரெயிலில் தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பயணிகள் ஆபத்தான நிலையில் சரக்கு பெட்டிகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.
ரெயில் நிலையங்கள் இல்லாத ஊர்களான இளையான்குடி, கமுதி, சாயல்குடி, பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் சென்னை செல்ல மானாமதுரை ரெயில் நிலையம் வந்து சென்னை-திருச்சி செல்லும் ரெயில்களில் கூட்டநெரிசலுடன் பயணம் செய்கின்றனர்.
சென்னை-ராமேசுவரம் மார்க்கத்தில் பல ஆண்டுகளாக கூடுதல் ரெயில்களோ, பகல் நேரசிறப்பு ரெயில்களோ இதுவரை இயக்கப்படவில்லை. பயணிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் சிவகங்கை மாவட்ட பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை சென்னை மார்க்கத்தில் இயக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.