உள்ளூர் செய்திகள்

கண்மாய் நிரம்பியதால் படையல் போட்டு அன்னதானம்

Published On 2022-09-24 07:47 GMT   |   Update On 2022-09-24 07:47 GMT
  • சிங்கம்புணரி அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியது.
  • கிடா வெட்டி படையலிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டியில் மட்டிக்கண்மாய் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் இது பிரமாண்ட ஏரி ஆகும்.

இந்த கண்மாயில் இருந்து மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, சிங்கம்புணரி, மணப்பட்டி, குமரத்த குடிப்பட்டி, காளாப்பூர் ஆகிய 6 கிராமங்களில் சுமார் 2500 ஹெக்டேர் ஆயக்கட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த தண்ணீர் மட்டிக்கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டு மட்டிக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மட்டிக்கண்மாய் சில தினங்களுக்கு முன்பு நிரம்பி மறுகால் பாய்ந்தது.

குறிப்பாக ஆவணி மாதத்தில் இந்த கண்மாய் 50 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக மறுகால் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை கொண்டாடும் வகையில் ஆயக்கட்டு தலைவர் மதிசூடியன் தலைமையில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தலைமடை பகுதியில் படையலிட்டு அன்னதானம் வழங்கினர்.

அதனை தொடர்ந்து கிடா வெட்டி படையலிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News