உள்ளூர் செய்திகள்

சாதனை புரிந்தவர்களுக்கு குடியரசு தின விருது

Published On 2022-06-26 08:40 GMT   |   Update On 2022-06-26 08:40 GMT
  • சாதனை புரிந்தவர்களுக்கான குடியரசு தின விருது பெற விண்ணப்பிக்கலாம்.
  • அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை,இலக்கியம்,

மருத்துவம், சமூகசேவை,அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிகள் உடைய தனித்தன்மைக் கொண்ட நபர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விருது எப்பொழுதும் உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் சாதனை எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும். இந்த விருது உயர்ந்த தர நிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும். பத்ம விருதுகள் நாட்டிலேயே 2-வது உயரிய விருதாக இருப்பதால் விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மானிய விருதோ பெற்றிருக்க வேண்டும்.

விருதிற்கு உரியவரை தேர்ந்தெடுக்கப்படும் போது சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்கள் நலிவடைந்த சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விருதிற்கு பரிந்துரை செய்யப்படும்.

அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

மேற்காணும் தகுதிகள் பெற்றவர்கள் பத்ம விருதிற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவம் www. padmaawards.gov.inஎன்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விருதிற்கு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.9.2022 ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News