தனியார் மையங்களை பரிந்துரை செய்யும் இ-சேவை ஊழியர்கள்
- சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இ-சேவை ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கின்றனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சிவகங்கையை சேர்ந்த வடிவேல் முருகன் என்ற ஆட்டோ டிரைவர் தனது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்தார்.
இதற்காக பலமுறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்த இ-சேவை மையத்திற்கு வந்ததாகவும், அங்கு கருவி வேலை செய்யவில்லை என்றும், மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பல்வேறு காரணங்களை கூறி சேவை மைய ஊழியர், தனியார் மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவித்தாராம்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கூறுகையில், அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நான் தனியார் மையங்களில் அதிக பணம் கொடுத்து குழந்தைக்கு சான்றிதழ் பெறுவது கடினமான செயல் என்று வருத்தம் தெரிவித்தார்.
இதுபோன்று அரசு இ-சேவை மையங்களில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இ-சேவை ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஊழியர்கள், பரிந்துரை, E-service, private