பறக்கும் ரெயில் நிலையத்தில் லிப்டில் சிக்கிய பெண் பயணிகள்
- ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
- ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் பறக்கும் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரெயில் நிலையத்தில் லிப்ட் வசதி உள்ளது.
மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் இந்த லிப்டை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் இதை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு ரெயில் நிலையத்துக்கு வந்த பெண் பயணிகள் லிப்டில் ஏறி சென்றனர். அப்போது லிப்டில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் லிப்ட் பாதி வழியிலேயே நின்றது. அதில் இருந்த 10 பெண் பயணிகளும் லிப்டில் சிக்கி தவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் லிப்டின் கதவை கழற்றி அதில் இருந்த 10 பெண்களையும் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அனைத்து பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.