பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை
- பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்.
- தேவகோட்டை பஸ் நிலையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இன்று திடீர் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தேவகோட்டையை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதற்காக பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
சமீப காலமாக கூட்டநெரிசல் காரணமாக பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ்குமார் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு செய்தார்.
தனியார் மற்றும் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இறக்கி விடப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை எச்சரித்துடன் அவர்களை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தினமும் காலை, மாலை நேரங்களில் ஆய்வு செய்வேன் என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார். அப்போது காவலர் சிலம்பரசன் உடன் இருந்தார்.