7 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் கடன் உதவி
- சிவகங்கையில் 7 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
- பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது 7 பயனாளிகளுக்கு ரூ.9.2 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:-
கூட்டுறவு கடன் சங்க பணியாயாளர்கள் நடப்பாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கினை எய்திட முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணியின் போது பொதுமக்களிடம் கனிவாகவும், முறையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
ஒவ்வொரு திட்டங்களின் வாரியாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கால அளவு, விவசாயிகளின் பயிர்கள் குறித்த விவரங்கள் போன்றவற்றை முறையாக பராமரித்து உயர்அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள, தேவையுள்ள பயனாளிகளுக்கு முழு அளவில் சென்றடைய பணி யாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும்.
எனவே தன்னலமற்ற பணி செய்து அரசின் திட்டங்களின் பயன்கள் பயனாளிகளுக்கு சென்றடைய சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, மேலாண்மை இணை இயக்குநா; ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், துணைப்பதிவாளர்கள் வெங்கட்லட்சுமி, சரவணன், கூட்டுறவு கடன் சங்க சார்பதிவாளர் மூகாம்பிகை உட்பட சங்கச் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.