உள்ளூர் செய்திகள்
கூலித்தொழிலாளி வீட்டுக்கு ரூ.95 ஆயிரம் மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சி
- ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம்.
- கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணமே வராமல் இருந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் ரேவண்ணா (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்தி வந்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணமே வராமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று அவரது செல்போனுக்கு 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்த ரேவண்ணா அதிர்ச்சி அடைந்தார். அவர் தாளவாடி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அவர்கள், 'மின்கட்டணம் கணக்கீடு செய்யும்போது குளறுபடி ஏற்பட்டிருக்கும். அதை சரிசெய்து தருகிறோம்' என தெரிவித்தனர். இதையடுத்து அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.