உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் போலீஸ் டி.எஸ்.பி. விசாரணை

Published On 2022-07-22 09:51 GMT   |   Update On 2022-07-22 09:51 GMT
  • மாணவியிடம், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார்.
  • மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி நேற்று மாலை பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவர் இடுப்பு எலும்பு முறிந்தும், விலா எலும்பு மற்றும் கால் மூட்டு பகுதிகளில் எலும்பில் விரிசல் ஏற்பட்டு படுகாயத்துடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியிடம், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார். அப்போது வலியால் துடித்த நிலையில், நான் வீட்டில் செல்லப்பிள்ளை. பள்ளி ஆசிரியை ஒருவர் என்னை திட்டியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் மனமுடைந்து 2-வது மாடியில் இருந்து குதித்தேன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதே போல் கல்வி அதிகாரிகளும் விசாரித்தனர்.

இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. மேலும் மாணவி எழுதி வைத்திருந்த டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

போலீசார் விசாரணையில், மாணவி பயிற்சி தேர்வில் பிட் அடிக்க பேப்பர் வைத்திருந்ததாகவும், அதை உடன்படிக்கும் தோழிகள் ஆசிரியையிடம் கூறியதால் ஆசிரியை கண்டித்துள்ளார். நாளை பெற்றோரை அழைத்து வரவும் கூறியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சல் ஏற்பட்டு வாழ்வா? சாவா? என யோசித்து கொண்டே தோழி ஒருவரிடம் இரண்டு விரல்களை காட்டி தொடும்படி கூறியுள்ளார். விரலை தொட்டவுடன் சற்றும் யோசிக்காமல் மாடியில் இருந்து குதித்து இருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் இருக்கும் பெற்றோரிடம் இன்று மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News