உள்ளூர் செய்திகள்

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் 23-ந் தேதி மீண்டும் வேலை நிறுத்தம்

Published On 2023-03-21 15:27 IST   |   Update On 2023-03-21 15:27:00 IST
  • தூய்மைப் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம்

கோவை,

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மார்ச் 23-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகரில் குப்பைகள் அகற்றிட தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும், 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பணிக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட உள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினருடன் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் வருகிற 23-ந் தேதி முதல் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது:-

வருகிற 23-ந் தேதி தொடங்கப்படும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோவை லேபர் யூனியன், கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம், தமிழ்நாடு தூய்மைக் காவலர் பொது தொழிலாளர் சங்கம், கோவை மாவட்ட அண்ணா சுகாதாரப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு நம்மவர் தூய்மைப் பணியாளர் தொழிற் சங்கம், கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் தூய்மைப் பணியாளர் சங்கம் ஆகியவை பங்கேற்கின்றன.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வைக்க துண்டுப் பிரசுரங்கள் மூலமாக அழைப்பு விடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எங்கள் போராட்டத்தால் குப்பைகள் அகற்றுதல், டெங்கு ஒழிப்புப் பணி உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் என்றார். தூய்மைப் பணியாளர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News