உள்ளூர் செய்திகள்

சாலையோரம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த வாலிபர்

Published On 2023-05-31 09:40 GMT   |   Update On 2023-05-31 09:40 GMT
  • ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமம் சேட்டூரில் உள்ள திருவேங்கடம் என்பவரது விவசாய நிலத்தின் அருகில் சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
  • வீரகனூர் போலீஸ் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமம் சேட்டூரில் உள்ள திருவேங்கடம் என்பவரது விவசாய நிலத்தின் அருகில் சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

உடல் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததால் அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தலைவாசல் போலீசுக்கு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

மலை பகுதியில் விவசாய தோட்டத்தின் அருகில் சாலை ஓரத்தில் அந்த வாலிபர் இறந்து கிடந்ததால் யாரேனும் அவரை அடித்துக் கொன்று வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் வாலிபரின் பிணத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர், தலைவாசல், வீரகனூர் போலீஸ் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பிணமாக கிடந்த வாலிபரைஅடையாளம் காணும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News