சேலம் அருகே வாகன சோதனையில்ரூ.14 லட்சம் போதை பொருட்கள் சிக்கியது
- தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொப்பூர் வழியாக கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவனுக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொப்பூர் வழியாக கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு விரைந்து சென்று சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
மினி சரக்கு லாரி
அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது 700 கிலோ எடை கொண்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் உட்பட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ஓட்டி வந்த கர்நாடகவை சேர்ந்த அஜய்குமார் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.
டிரைவர் பெங்களூரில் இருந்து மேட்டூருக்கு போதை பொருட்களை கடத்தி செல்வதாக கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.