உள்ளூர் செய்திகள்

லாரி மீது கார் மோதி அரசு ஊழியர் பலி

Published On 2023-10-29 09:02 GMT   |   Update On 2023-10-29 09:02 GMT
  • காரில் தூத்துக்குடியில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அந்த காரை அவரது மகன் தனுஷ் ஓட்டினார்.
  • படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

சேலம்:

சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 60). இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் ஒரு காரில் தூத்துக்குடியில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அந்த காரை அவரது மகன் தனுஷ் ஓட்டினார். கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு சேலம் திரும்பினர்.

கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் கருப்பூர் கரும்பாலை அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் முன் பகுதியில் இருந்த ராஜமாணிக்கம் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். ஆனால் கார் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காகமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News