உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் செய்திமக்கள் தொடர்பு துறை சார்பில் நடந்த புகைப்பட கண்காட்சியில் 360 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். அருகில், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, எம்எல்ஏக்கள் மதியழகன், பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

360 பயனாளிகளுக்கு ரூ.1.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-01-16 15:22 IST   |   Update On 2023-01-16 15:22:00 IST
  • புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா நடந்தது.
  • தற்போது, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, மீண்டும் மஞ்சபை விழிப்புணர்வு, அறிவு திறனை வளர்த்துக்கொள்ளும் விதமாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா நடந்தது.

இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, எம்.பி செல்லகுமார், எம்.எல்.ஏ-க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், 360 பயனாளிகளுக்கு ரூ.1.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ மாணவியர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்து பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஒற்றுமையும் பேணி பாதுகாக்கும் வகையில் தற்போது பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம், அரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, மீண்டும் மஞ்சபை விழிப்புணர்வு, அறிவு திறனை வளர்த்துக்கொள்ளும் விதமாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையிட்டு பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாட, அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். தொடர்ந்து, கலை திருவிழாவில் மாநில அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்கு குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், பிஆர்ஓ., மோகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், நகராட்சி தலைவர் பரிதாநவாப், முன்னாள் எம்பி சுகவனம், வெற்றிச்செல்வன் உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News