ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் ரூ.3.27 கோடி அபராதம் வசூல்
- முறையற்ற வகையில் பயணிப்பவர்களை கண்டறிந்து, அதிகாரிகள் மூலமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
- பதிவு செய்யாமல் சரக்குகளை ரெயிலில் கொண்டு சென்ற 105 பேரிடம் இருந்து ரூ55 ஆயிரத்து 283 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை,
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரெயில் நிலையங்களில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள், முறையற்ற பயணம் மேற்கொண்டவர்களிடம் இருந்து ரூ.3.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,
சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரெயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதவு செய்யாமல் சரக்குகளை ரெயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து, ரெயில்வே பரிசோதனை அதிகாரிகள் மூலமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடப்பு காலாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை, சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 31 ஆயிரத்து 475 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 875 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 16 ஆயிரத்து 515 பேரிடம் இருந்து ரூ.83 லட்சத்து 59 ஆயிரத்து 362 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் சரக்குகளை ரெயிலில் கொண்டு சென்ற 105 பேரிடம் இருந்து ரூ55 ஆயிரத்து 283 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, இந்தாண்டின் முதல் காலாண்டில் ரூ.3 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 520 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது.