உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே ரூ.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Published On 2022-06-20 08:44 IST   |   Update On 2022-06-20 08:44:00 IST
  • ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அதிகாரிகள் கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர்.
  • பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

காஞ்சிபுரம்:

ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முசரவாக்கம், பகுதியில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முசரவாக்கம் ஏரியில் ரூ.15 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு நிலங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டு கையகப்படுத்தி அறிவிப்பு பலகையை வைத்தனர்.

Tags:    

Similar News